January 24, 2019 தண்டோரா குழு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் 3வது நாளாக இன்றும் (ஜன.,24) தொடர்கிறது. இன்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு திரண்டு சிறிது நேரம் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 3-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. வேலைக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தமிழக தலைமை செயலாளர் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை கமிஷனரும் எச்சரித்துள்ளார். இதற்கிடையில் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது. 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடருவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு ஊழியர்கள், ஆசியர்கள் போராட்டம் தொடரும் என ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் அறிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழுவினர்,
ஜாக்டோ- ஜியோவில் உள்ள 23 அமைப்புகளும் போராட்டத்தை நிச்சியம் தொடரும் என தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 28ம் தேதி எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறினார்.