March 25, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரனுக்கு ஆதரவாக உடையாம்பாளையம் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது,
5000 கிமீ க்கு பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். தேர்தலில் பிரச்சாரம் செய்வது மக்களை சந்திப்பதும் புதிதல்ல இது ஒரு புதிய முயற்சிகாக எடுக்கின்ற பயணம் என்று தெரிவித்தார். தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுப்பதாக கூறினால் மக்களின் வாழ்வாதாரம் உயர வில்லை என்றுதான் அர்த்தம்.
அரசியல் என்பது மற்றவர்களுக்கு வியாபாரம் ஆனால் எங்களைப் பொறுத்தவரை கலை சேவை செய்து விட்டு மக்களுக்கு சேவை புரிய வந்துள்ளோம்.கலைச்சேவை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே நானும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளோம்.மஞ்சள் பையுடன் வந்தவர்கள் எல்லாம் தற்பொழுது கோடிகோடியாய் சம்பாதிக்கின்றனர். இறைவனின் படைப்பில் நாம் அனைவரும் ஒன்று என்ற தத்துவத்தை வைத்துக் கொண்டிருந்தவர்களை பிரித்தவர்கள் திராவிட இயக்கங்கள் தான்.
ஒவ்வொரு தேர்தலிலும் வேறுவேறு சின்னங்களில் தனியாக நின்று பார்த்தால் யார் ஜெயிப்போம் என்று தெரிந்துவிடும் என்று சவால் விடுத்தார். நாம் தற்பொழுது காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் என்று சொன்னால் இளைய சமுதாயத்தையும் நாம் ஏமாற்றுகிறோம் என்று தான் அர்த்தம் என்று தெரிவித்தார்.
திமுகவினர் தேர்தல் அறிக்கையில் காவல்துறையினர் பணியில் இருக்கும் பொழுது இறந்தால் நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு ஒருபுறம் காவல்துறையினர் மிரட்டி வருகிறார்கள் என்று விமர்சித்தார். அனைவரும் ஒன்று சேர்ந்து வெள்ளையனை வெளியேற்றியது போல் தற்பொழுதும் அனைவரும் ஒன்று சேர்ந்து இரண்டு கட்சியினரும் வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரசாரத்தை முடித்து விட்டு கீழே இறங்கி மக்களிடம் ஆதரவு திரட்டிய அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.