• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து என்ன?

November 9, 2019

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், மற்றும் போப்டே ஆகியோர் கொண்ட 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், வழக்கு தொடர்ந்த 3 தரப்புக்கும் நிலம் சொந்தமல்ல. சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று குறிப்பிட்டனர். இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மொத்தம் ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அனைத்து தரப்பினரும் அயோத்தி தீர்ப்பை சமமான சிந்தனையுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டிருக்கிறது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை விருப்பு, வெறுப்புக்கு உட்படுத்தாமல் மத நல்லிணக்கம் போற்றி அனைவரும் முன்னெடுத்து செல்வார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்

பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் மற்றும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை பன்பு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி

100 ஆண்டுகால அயோத்தி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது போல உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சாதக பாதக அம்சங்களை மனதில்கொண்டு நாட்டு நடப்பினையும் அறிந்து தெளிவான தீர்ப்பு அளித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது என்று அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினருக்கும் வேறுபாடின்றி பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இல.கணேசன்

உச்சநீதிமன்ற தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்; யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லாத தீர்ப்பு என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும், அனைவரும் மதிப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க