July 24, 2018
தண்டோரா குழு
ஜெயலலிதாவின் மகள் அம்ருதா அல்ல என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும்.அதற்காக அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில்,1980ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி நான் ஜெயலலிதாவுக்கு மகளாக பிறந்தேன்.மூன்று மாத குழந்தையாக இருந்த போது ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டேன்.தற்போது எனது உறவினர்கள் மூலம் நான் ஜெயலலிதாவின் மகள் என்பதை தெரிந்து கொண்டேன்.அதனால் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து குலவழக்கபடி சம்பிரதாய சடங்குகளை செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்ட்ட நிலையில் தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில்,இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை என வாதிட்டார்.
மேலும், 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் நாள் அம்ருதா பிறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.அதே ஆண்டு ஜூன் மாதத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதா கலந்துகொண்ட வீடியோவை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.ஜெயலலிதா கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் வீடியோவில் இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.