August 26, 2019 தண்டோரா குழு
வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து , தமிழ் புலிகள் கட்சியினர் கோவையில் இரண்டு அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் பேருந்துகளின் பின் பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.
கோவை காந்திபுரத்தில் இருந்து மருதமலை செல்லக் கூடிய 70 டி என்ற அரசு பேருந்து கவுண்டம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் ஓடும் பேருந்து மீது கல்லை வீசி உள்ளார். இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்தது. இது தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில் பேருந்தை தாக்கிய கல்லில் பேப்பர் சுற்றி எறியபட்டது தெரியவந்தது. அந்த பேப்பரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக கண்டனம் தெரிவிப்பதாகவும், சிலை உடைத்தவர்களை கைது செய்ய கோரியும் எழுப்பி உள்ளனர்.
மேலும் சிலைகளை உடைக்கலாம் ஆனால், சித்தாந்தங்களை சிதைக்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த தமிழ் புலிகள் கட்சியினர் என்ற அடிப்படையில் துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே போல கோவையில் இருந்து ஊட்டி செல்லக் கூடிய அரசு பேருந்து புதிய பேருந்து நிலையத்தில் நின்ற கொண்டிருந்த போது அதன் பின் பக்க கண்ணாடி மீது கல் வீசப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து , கோவையில் இரு வேறு இடங்களில் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.