January 7, 2019 தண்டோரா குழு
3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பாலகிருஷ்ணன் ரெட்டி தமிழகத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவர் மீது 1998-ல் விநாயகர் ஊர்வலத்தின் போது பேருந்து மீது கல்வீசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டது. இதற்கிடையில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் மேல் முறையீடு செய்ய மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி அமைச்சர் மேல் முறையீடு செய்வதற்காக அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில்,அமைச்சர் பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.