June 23, 2018
தண்டோரா குழு
அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணிகளை ஆளுநர் செய்வது கண்டிக்கத்தக்கது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். வழக்கமாக போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் காலை கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால் நாமக்கல்லியில் கைது செய்யப்பட்ட தி.மு.கவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் திமுக சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.
அப்போது, பேரணியாக சென்ற திமுகவினர் கிண்டியில், போலீசாரின் தடுப்புகளை மீறி முன்னேறிச் செல்ல முயன்றபோது, தள்ளுமுள்ளு உருவானது. பின்னர் திமுகவினர் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
ஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியே இந்த திடீர் போராட்டம் நடைபெறுகிறது.மாநில உரிமைகளில் ஆளுநர் தலையிடுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. கைது நடவடிக்கைக்கு அஞ்சவில்லை, எங்களை தற்போது கைது செய்து மாலையில் விடுவித்தால் மீண்டும் அடுத்தகட்ட போராட்டம் நடைபெறும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், சேலம் 8வழி சாலை திட்டப்பணிகளை மக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் நிறைவேற்ற வேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஆளுநர் செய்வது கண்டிக்கத்தக்கது எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.