January 28, 2019 தண்டோரா குழு
2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக கமலா தேவி ஹாரிஸ் அறிவித்தார். வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு போட்டியிடும் எட்டாவது நபர் கமலா அவர். இவரின் தாயார் சியாமளா கோபாலன், சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.
தேர்தலுக்காக தமது பிரசாரத்தைத் தொடக்கிய கமலா தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற வாசகத்தை முழங்கிய ஜெயலலிதாவைப் போல், அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளிப் பெண் கமலா தேவி ஹாரிஸ் “மக்களுக்காக நான்” என்பதை முன்வைத்து பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், கமலா தேவி ஹாரிஸ், வழக்கறிஞராக தன் பணியை தொடங்கிய நீதிமன்றம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பரப்புரையை தொடங்கியுள்ளார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், தனது வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர்.