May 20, 2016
தண்டோரா குழு.
அமெரிக்காவில் இன்டெல் கார்ப்பரேசனும், எஸ்.எஸ்.பி. என்னும் அறிவியல் பொதுச்சமூக அமைப்பும் இணைந்து ஆண்டுதோறும் அறிவியல் துறையில் சாதனைப் படைக்கும் மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி வருகின்றன.
இந்த ஆண்டு அந்த விருதை இந்திய வம்சாவளியை சேர்ந்த டெக்சாஸ் மாணவர் சியாமண்டக் பாய்ரா (வயது 15), கேத்தி லியு என்ற 17 வயது மாணவருடன் இணைந்து பெற்றார். இவர்கள் பலவீனமான கால்களை உடையவர்களும் இயல்பாக நடப்பதற்கு உதவுகிற, குறைந்த விலையிலான மின்னணு மூட்டுச் சாதனத்தை கண்டுபிடித்து சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இது தொடர்பாக பொதுச் சமூக அமைப்பின் தலைவர் மாயா அஜ்மீரா கூறும்போது, “இந்த ஆண்டு இளம் விஞ்ஞானி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சியாமண்டக் பாய்ராவும், கேத்தி லியுவும் ஆராய்ச்சி செய்வதற்கும், முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “அவர்கள் வெற்றி பெற்றதற்காக மட்டுமல்லாது அவர்களின் அர்ப்பணிப்புக்கும், கடின உழைப்புக்கும் சேர்த்து பாராட்டுகிறோம்” என்றார்.
இளம் விஞ்ஞானி விருது 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.33 லட்சம்) ரொக்கப் பரிசுடன் கூடியதாகும். அந்தப் பரிசை சியாமண்டக் பாய்ராவும், கேத்தி லியுவும் பகிர்ந்து கொண்டனர்.