August 28, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவினர் மற்றும் ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் இணைந்து தாய்ப்பால் தானம் செய்து வருவது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது பல்வேறு ஊட்டசத்துகளை வழங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்திகளையும் அதிகரிக்க முக்கிய உணவாக உள்ளது.இந்நிலையில் குறை பிரசவம் மற்றும் கொரோனா போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்களால் பிறந்த குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக அமிர்தம் தாய்ப்பால் தானம் குழு என்பதை உருவாக்கி இதன் வாயிலாக சுமார் 2000 பேரை இணைத்து தாய்ப்பால் வழங்கும் பணியை செய்து வருகிறார் ரூபா செல்வநாயகி. அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவின் நிறுவனரான இவர்,இவரது குழுவினருடன் இணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக சுமார் பத்தாயிரம் லிட்டர் தாய்ப்பால் வழங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் இவரது அரிய சேவையை அறிந்த,ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் நிர்வாகிகள் இவருடன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கிக்கு தாய்ப்பால் வழங்கும் பணியை செய்யும் திட்டத்தை துவக்கியுள்ளனர்.ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் சேவை திட்டங்கள் தலைவர் வெங்கடேஷ், சேவை திட்ட துணை தலைவர் சதீஷ் மற்றும் மாவட்ட தாய்ப்பால் ஊக்குவிப்பு பிரதிநிதி மணிகண்டன் ஆகியோர் தலைமையில் இதற்கான துவக்க நிகழ்ச்சி கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் சேவை ஒருங்கிணைப்பாளர்கள் பூபதி மற்றும் செந்தில் குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,அரசு மருத்துவமனை தாய் சேய் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் செந்தில் குமார் கலந்து கொண்டார். தற்போதைய கொரோனா கால கட்டத்தில், தாய்ப்பால் வங்கியில் உள்ள இருப்பின் அளவு குறைந்து வரும் நிலையில் இது போன்று தாய்ப்பால் வழங்கும் தன்னார்வலர்களால் பிறக்கும் குழந்தைகளின் பசியாற்றுவதோடு,குழந்தைகளின் நலன் காக்கப்படுகிறது.
தாய்ப்பால் தானம் குறித்து, மாவட்ட தாய்ப்பால் ஊக்குவிப்பு பிரதிநிதி மணிகண்டன் கூறுகையில்,
கோவை அரசு மருத்துவமனையில் எடை குறைவான குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தானமாக வழங்கும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களின் உடல்நலன் முன்னேற்றம் அடையும் எனவும்,குறிப்பாக அமிர்தம் தாய்ப்பால் குழுவினர் இந்த பணியை சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம்,நாமக்கல் மற்றும் சென்னை என தற்போது எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தாய்மார்கள், சுமார் 2000 பேர் இந்த குழுவில் இருப்பதாகவும் கூறிய அவர்,தாய்ப்பால் தானம் வழங்க ஆர்வமாக இருக்கும் தாய்மார்கள் 96779 77731 மற்றும் 96779 77736 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், தாய்ப்பால் தானம் எவ்வாறு வழங்க வேண்டும் அதற்கான வழிமுறைகள் குறித்து,அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவினர் மூலமாக எடுத்து கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தாய்ப்பால் வங்கி என்பது இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் தாய்ப்பால் தானமாக வழங்கி வரும் இக்குழுவினருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.