August 19, 2021
தண்டோரா குழு
அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விவசாயியை தாக்கிய கிராம உதவியாளர் முத்துசாமியை நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விவசாயி மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் அன்னூரில் விவசாய கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோபுரத்தை சேர்ந்த விவசாயி கோபால்சாமி நிலப் பிரச்சனைக்கு ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு சென்றபோது கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி விவசாயியை கடுமையாக தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.பின்னர் அவரே விவசாயி காலில் விழுந்து விட்டு தன்னை விவசாயி கோபால்சாமி காலில் விழுந்து விட்டதாக பொய் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் விவசாயி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் முத்துசாமி வேண்டுமென்றே விவசாயி மீது குற்றம்சாட்டிய வீடியோ வெளியான நிலையில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி மீது போர்க்கொடி தூக்கி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்கங்கள் இன்று அன்னூரில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.இதனையடுத்து அன்னூர் முழுவதும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன அன்னூர், பொகலூர், குருக்கிலியாபாளையம், கரியாம்பாளையம்,கஞ்சம் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீக்க வேண்டும் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி மீதும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் அதுவரை போராட்டம் தொடர உள்ளதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.