November 1, 2019 தண்டோரா குழு
கோவை வடவள்ளியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி வளாகத்தில் அனிமீயா என்ற ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர்,
வைட்டமின் பி12, இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகம்.பெண்கள் சத்துள்ள பசலை கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, கம்பு, ராகி, கோதுமை, பேரிச்சம்பழம் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ரத்தசோகை பாதிப்பு இருந்தால் முடி உதிர்தல், நகம் உடைதல் , படபடப்பு, சோர்வு, முகம் வெளிரிய நிலையில் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ரத்த சோகை ஏற்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவிகள் தங்களது உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும். ஆலயம் அறக்கட்டளை சார்பில் தன்னார்வலர்கள் உதவியுடன் நகரில் அனைத்து குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் ரத்த சோகை விழிப்புணர்வு நடத்தப்படும். பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்துவதன் மூலமாக மாணவிகள் நோய் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அதிக ரத்தப்போக்கு காரணமாகவும் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும். சத்தான உணவுகள் மூலமாகவே பெண்கள் ரத்தசோகை பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழிப்புணர்வு முகாமில் கோவை மாநகராட்சி கமிஷனர் ஷர்வண் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.