November 18, 2019
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர் மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்தனர்.
கடந்த 11 ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டதால் ராஜேஸ்வரியின் இடதுகால் மருத்துவர்களால் அகற்றப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இந்நிலையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, ராஜேஸ்வரியின் பெற்றோர்களான நாகநாதன் – சித்ரா ஆகியோர் அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்ட அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.