November 18, 2017
தண்டோரா குழு
மாநிலத்திற்கு மாநிலம் கவர்னர்களின் செயல்பாடுகள் மாறுபடுகின்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆனால் சோதனைகளில் என்ன கைப்பற்றபட்டது என்பது தொடர்பாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. வருமான வரித்துறை சோதனை பாரபட்சமாக நடத்தப்படுகிறது. வருமான வரித்துறையினர் அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது. ஊழல்வாதிகள் ஒருபக்கம் மட்டும் இல்லை. அதிமுகவின் மற்றொரு பக்கமும் வருமானவரித்துறை சோதனை நடத்த வேண்டும். அரசியல் லாப நோக்கத்தில் வருமானவரித்துறை சோதனையை பா.ஜ.க பயன்படுத்துகின்றது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், பா.ஜ.க ஆளும் குஜராத், ம.பி, உ.பி மாநிலங்களில் ஏன் கவர்னர் ஆய்வுகள் செய்வதில்லை என கேள்வி எழுப்பிய அவர் காங்கிரஸ் ஆளும் புதுவையில் ஆளுநர் மூலம் இடையுறு செய்யப்படுகின்றது. மாநிலத்திற்கு மாநிலம் கவர்னர்களின் செயல்பாடுகள் மாறுபடுகின்றது எனவும் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வரை மீறி தமிழக ஆளுநர் செயல் படுவது சரியல்ல எனவும் தெரிவித்தார்.