July 21, 2021
தண்டோரா குழு
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டது.அதிக முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க திட்டம் – தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,கோவை-அவினாசி சாலையில் உள்ள டைட்டல் பார்க் பகுதியில், 114 கோடி மதிப்பீட்டில்,2வது எல்காட் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-
கோவையில் 114 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் எல்காட் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தவர்,தமிழக முதல்வரை பொறுத்தவரை,தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கி வேலை வாய்ப்பை பெருக்கவும்,படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் கூறியுள்ளார்.
இந்த தொழில் நுட்ப பூங்காக்கள் வேலை வாய்ப்பை பெருக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.இதன் மூலம் தமிழகத்தின் வருவாயை பெருக்கவும்,பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் முடிகின்றது என்றவர்,வெளிநாட்டு முதலீடுகளை பொறுத்த வரை, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டது என குற்றம் சாட்டியவர்,இதனால் பின் தங்கியுள்ளோம் என்றும்,அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டங்கள் வகுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஐடி துறையில் உள்ளோர்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்வுகளில்,தகவல் தொழில் நுட்ப துறை முதன்மை செயலாளர் நீரஜ்மித்தல், மேலாண் இயக்குனர் அஜய் ஆதவ், மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.