January 25, 2019 தண்டோரா குழு
அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என, கர்நாடக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மோகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
மேகதாது அணை குறித்து கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும். காவிரி தொடர்புடைய மாநிலங்கள் அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ‘மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, மேகதாது
அணை திட்டத்தை செயல்படுத்தினால் லட்சக்கணக்கான காவிரி பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவர், மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை திருப்பி அனுப்புங்கள், காவிரி தொடர்புடைய மாநிலங்களின் அனுமதியின்றி அணை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது’ என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.