August 31, 2017 தண்டோரா குழு
குடியரசுத் தலைவரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று(ஆகஸ்ட் 31) சந்தித்தனர்.
சட்டப்பேரவையைக்கூட்டி நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட வலியுறுத்தி குடியரசுத் தலைவரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று சந்தித்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் 19 பேர் திரும்பப் பெற்றனர்.இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள்,மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டன.
இதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர்,அதிமுக இரு குழுவாக பிரிந்துள்ளதால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும் விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் 19 எம்எல்ஏக்களும் அதிமுகவில் இருந்து விலகினால் மட்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில், திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில், சட்டசபையைக் கூட்டி முதல்வரை நம்பிக்கை வாக்கு கோர ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரை கேட்டுக்கொண்டுள்ளனர்.