February 20, 2019
தண்டோரா குழு
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர்ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ . இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் சிம்புதேவன் இயக்கினார். வடிவேல் நாயகனான நடிக்கும் இப்படத்தை ஷங்கர் தயாரித்து வந்தார்.
இதனையடுத்து ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஆனால் படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். வடிவேலுவின் இந்த நடவடிக்கையால் படத்தின் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். இதனால், வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறப்பட்டது.எனினும் இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்நிலையில் வடிவேலுவின் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். மேலும் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.