June 8, 2021
தண்டோரா குழு
கோவையில் கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் ஆதரவற்றோர், முதியோர்கள், பெண்கள், மனநலம் குன்றியவர்களை பிரபஞ்ச அமைதி ஆசிரம காப்பகங்களில் பாதுகாக்க பராமரிக்க தயராக உள்ளோம் என பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் நிறுவனர்/நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
கோவை சூலூர் கருமத்தம்பட்டி – அன்னூர் சாலை,காடுவெட்டிபாளையம், நல்ல கவுண்டன் பாளையத்தில்பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் உள்ளது. ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம், பெண்கள் காப்பகம், மாற்றுத்திறனாளிகள் காப்பகம் என பல்வேறு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 365 பேர் ஆசிரமம் மூலம் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் மூலம் கொரோனாவால் ஊரடங்கு காலத்தின்போது, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இன்றி தவிப்போர், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு உணவு வழங்குதல் முகக் கவசம் சனிடைசர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இது குறித்து குருஜி ஷிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கொரோனா பேரிடர் கால கட்டத்தில் நம்மால் இயன்ற வரை பிறருக்கு எவ்வளவு உதவ முடியுமோ? அவ்வளவு உதவிகளை அளிக்க வேண்டும். அனைவரையும் நன்றாக பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்.ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம், பெண்கள் காப்பகம், மாற்றுத்திறனாளிகள் காப்பகம் என பல்வேறு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 365 பேர் ஆசிரமம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மிகவும் பாதுகாப்புடன் உள்ளனர்.
ஆசிரமத்தை சுற்றியுள்ள கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு அரிசி, காய்கறிகள், எண்ணெய், முகக்கவசம், சானி டைசர் ஆகியவற்றை வழங்கி விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தி வருகிறோம். கொரோனா ஊரடங்கால் பசியை தணிக்க வழியில்லாது சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும், பசியோடு தவித்து கொண்டிருக்கும் சாலையோர மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
மேலும், இது போல கோவை, ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் எங்களது சேவையை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறோம். இந்த சேவை சிறப்பாக நடைபெற நன்கொடை அளித்து வரும் நன்கொடையாளர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய இரு துறைகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம். தாய்,தந்தையை இழந்த குழந்தைகளுக்கு எந்த காப்பகங்களில் சேர்க்கலாம் என கலந்து ஆலோசிக்குமாறு தெரிவித்து உள்ளோம். நாங்களும் எங்களது காப்பகங்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக முதல் குரல் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள், பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியவர்கள் என இந்த காப்பகம் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆதரவளித்து சேவையாற்ற தயாராக உள்ளோம் என தெரிவித்தார். இதுபோன்ற ஆதரவற்றோருக்கு தங்களால் முடிந்த உதவிகளை மனமுவந்து செய்யுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.