June 5, 2021
தண்டோரா குழு
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரொனா சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் சுப்பைய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் வீரக்குமார் (55). இவருடைய மனைவி சாந்தி (45).இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ந் தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவர், கடந்த 24-ந் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர், அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை அந்த மருத் துவமனையில் பணியாற்றும் செவிலியரிடம் கழட்டி கொடுத்துள்ளார்.
இதன்பின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த உடன் சாந்தி தனது தங்க சங்கிலியை தருமாறு அந்த செவிலியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகரனிடம் கொடுத்ததாகவும், அவரிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார். உடனே சாந்தி பிரபாகரனிடம் தனது தங்க சங்கிலி குறித்து பலமுறை கேட்டுள்ளார்.ஆனாலும் நகையை பிரபாகரன் திருப்பி தராமல் இருந்துள்ளார்.இது குறித்து சாந்தி மருத்துவமனை மேலாளர் ரவி சந்திரனிடம் புகார் அளித்தார்.அவர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தினார்.
அப்பொது பிரபாகரன் தங்க சங்கிலியை தனது மேஜை டிராயரில் வைத்து இருந்ததாகவும் தற்போது காணவில்லை என்று கூறியிருக்கிறார்.இதையடுத்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மேஜை ட்ராயரில் இருந்த தங்க சங்கிலியை ஆம்புலன்ஸ் டிரைவர் தீபன் என்பவர் எடுத்து செல்வது தெரியவந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் தீபனிடம் விசாரித்த போது மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகரன் நகையை எடுத்து வர சொன்னதால் தான் சென்று நகையை எடுத்து வந்ததாகவும் அதை பிரபாகரனிடம் கொடுத்து விட்டதாகவும் கூறினார். ஆனால் பிரபாகரன் மறுத்துள்ளார்.
இதையடுத்து சாந்தி சரவணம் பட்டி போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபாகரன் மற்றும் தீபனடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதலில் நகையை தான் வாங்கவில்லை என்று மறுத்த மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகரன் பின்னர் தான் ஆம்புலன்ஸ் டிரைவர் தீபனடமிருந்து நகையை வாங்கியதை ஒப்புக்கொண்டார். வாங்கிய நகையை தொலைந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் அந்த நகைக்கு உரிய பணத்தை கொடுத்து விடுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.