June 4, 2021
தண்டோரா குழு
மேற்கு மண்டல ஐ.ஜி-யாக சுதாகர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேற்கு மண்டல ஐஜி-யாக பணியாற்றி வந்தவர் அமல்ராஜ். இவர் பதவி உயர்வு பெற்று சென்னையில் கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மதுரை சரகத்தில் டிஐஜியாக பணியாற்றி வந்த சுதாகர் பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டல ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார்.
இதேபோல் கோவை சரக டிஐஜி ஆக பணிபுரிந்த நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு சென்னை சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவரது இடத்திற்கு திண்டுக்கல்லில் டிஐஜியாக பணிபுரிந்து முத்துசாமி பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் இன்று மேற்கு மண்டல ஐ.ஜி-யாக சுதாகர் ரேஸ் கோர்சில் உள்ள அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய ஐஜியாக பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல் கோவை சரக டிஐஜி-யாக முத்துசாமியும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கோவை மாநகர போலீசில் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக சேலத்தில் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய முருகவேல் நியமிக்கப்பட்டிருந்தார். இங்கு கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றிய ரமேஷ் கிருஷ்ணன் நாகப்பட்டினம் கடலோர காவல் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய உளவுப்பிரிவு உதவி கமிஷனர் முருகவேல் பொறுப்பேற்றுக்கொண்டார்.