June 3, 2021
தண்டோரா குழு
ஜூன் 3 கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய கோரி கோவையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு முன் விடுதலை திட்டத்தை 1994ல் கொண்டு வந்தது. எவ்வளவு பெரிய குற்றங்களை செய்தவர்களாக இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் அவர்களை முன் விடுதலை செய்ய முடியும். அண்ணா பிறந்தநாள், அண்ணா நூற்றாண்டு, எம்ஜிஆர் நூற்றாண்டு, செம்மொழி மாநாடு, என பல நிகழ்வுகளில் பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், முஸ்லிம் சிறைவாசிகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை என்ற கூறப்படுகிறது.
தமிழக சிறைகளில் 47 முஸ்லிம் சிறைவாசிகள் இருபது ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பத்தாண்டுகளை கடந்த சிறையில் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மேலும் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கோவை மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளியுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M.I.அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில பொருளாளர் T.M.இப்ராஹிம் பாதுஷா, பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மண்டல தலைவர் A.அன்வர் உசேன் பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட செயலாளர்கள் A.அப்துர் ரஹ்மான் மற்றும் K.முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.