June 2, 2021
தண்டோரா குழு
+2 தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதையடுத்து, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா என்பது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
”மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களின் உடல் நலனும் பாதுகாப்பும் முக்கியம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா அல்லது நடத்தலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும். இரண்டு நாட்களுக்குள் கருத்து கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும்.
இதுகுறித்துக் கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் ஆலோசனைகளை அளிக்க துறை இ-மெயில் முகவரி அளிக்கப்படும். ஊடகங்களும் தங்களுடைய அறிவுரைகளை அளிக்க வேண்டுகிறேன். அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரின் பெற்றோர்களிடமும் இரண்டு நாட்களுக்குள் கருத்து கேட்பது சாத்தியமில்லை. அதனால் அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
[email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் +2 தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.