May 29, 2021
தண்டோரா குழு
மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, உரிம கட்டணங்களை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் அனைத்து துறைகளும் குறிப்பாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு இந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் வங்கிகளின் பெறப்பட்ட கடன் மற்றும் வட்டி தொகையை கட்டுவதற்கான விடுப்பு காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு வரும் 2022-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
பொருளாதார சிக்கலில் இருந்து மீளும் வகையில் பொதுத்துறை வங்கிகள், வங்கிசாரா 20 சதவீத புதிய கடனுதவியை தொழிற்சாலைகளின் நிலைக்கேற்ப வழங்க வேண்டும்.ஊரடங்கு காலத்தில் ஏற்படும் தொழில் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா கால ஊக்க திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும்.
அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வர வேண்டிய தொகைகளை உடனடியாக அளிக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் உயர்ந்தபட்ச கடன் உதவித்தொகையை ரூ.25 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்த வேண்டும்.
ஆக்ஸிஜன் செறிவூட்டி, முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் தயாரிப்புக்கு 2 ஆண்டுகள் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துதலில் ஈடுபட ஏதுவாக தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தொழில் நிறுவன வளாகங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்கும் வசதிகள் ஏற்படுத்த மானியங்கள் வழங்கப்பட வேண்டும்.
பொது முடக்க காலத்தில் வழங்கப்படும் ஊதியங்கள் மீதான இ.எஸ்.ஐ., பி.எஃப். தொகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, உரிம கட்டணம் உள்ளிட்டவற்றை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.