May 26, 2021
தண்டோரா குழு
கோவையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசாணை எண் 251ன் படி தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே வசூலிக்க வேண்டும். அதன்படி நாளொன்றுக்கு மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.20 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ3 முதல் ஏ6 வரையுள்ள மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.18.5 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.36.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சிக்கு வெளியிலுள்ள மருத்துவமனைகளில் ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.15 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ3 முதல் ஏ6 வரையுள்ள மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.13.5 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.31.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது காப்பீடு மற்றும் காப்பீடு அல்லாத அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெறும் நோயாளிகளிடம் மருத்துவமனை சார்பில் எந்தவொரு கட்டணமும் பெறக் கூடாது.
மேற்கூறிய கட்டணங்கள் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியறை, கூடுதல் வசதிகளுடன் உள்ள அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். மாநகராட்சிப் பகுதியிலுள்ள ஏ1, ஏ2 தர மருத்துவமனைகள் காப்பீடு இல்லாத பயனாளிகளிடம் ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக வசூலித்தாலோ, காப்பீடு பயனாளிகளிடம் கட்டணம் வசூலித்தாலும் பொது மக்கள் 1800 425 3993, 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.