May 22, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடைகிறது.இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர் நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,“இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது” என்று பேசியுள்ளார்.