May 14, 2021
தண்டோரா குழு
வங்கிக்கடன் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியிருப்பதாவது:
கொரோனாவால் தொழில் நிறுவனங்கள் வருமானத்தை இழந்துள்ள சூழலில் வங்கிக்கடன், வரி, மின்கட்டணம் செலுத்த முடியாமல் குறு, சிறு நிறுவனங்கள் திணறி வருகின்றன.சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவில் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் கேந்திரங்களாக உள்ளன. நேரடியாக 12 கோடி பேருக்கும், மறைமுகமாக 20 கோடி பேருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கின்றன.
இச்சூழலில் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு கோரிக்கைகளுக்கு ஏற்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்படி, தகுதியுள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக்கடன் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்.
முழு ஊரடங்கு உத்தரவால் உற்பத்தியை இழந்துள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பு ஊக்க தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்கு அவற்றின் நடப்பு மூலதன கடன் அல்லது ரொக்கக் கடன் வசதி ஆகியவற்றில் கூடுதலாக 20 சதவீதம் கடன் உதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும்.
வங்கிக்கடன் வட்டிக்கான தள்ளுபடி, மின்சார கட்டணம் தள்ளுபடி, வருமானவரி, ஜி.எஸ்.டி. சலுகைகள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். கொரோனா நன்கொடை வழங்குவோருக்கு, 100 சதவீதம் வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., மற்றும் வருமானவரியில் தொழில் நிறுவனங்களுக்கு திரும்ப அளிக்கும் தொகையை போர்க்கால அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.
பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட எரிபொருளை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை வளாகத்தில் தங்கும் வசதி ஏற்படுத்த அரசு மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.