May 5, 2021
தண்டோரா குழு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குளத்தை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைத்தல், குடிநீர், பாதாளசாக்கடை, சூரிய மின்சக்தி, எல்.இ.டி விளக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி இத்திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குளம் சீரமைக்க பணிகள் கடந்த ஜுன் மாதம் துவக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிச்சி குளம் 334.92 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தின் கொள்ளளவு 50 மில்லியன் கன அடி ஆகும். இக்குளத்தின் மொத்த நீர்பிடிப்புப் பகுதி 12.30 சதுர கி.மீ கொண்டதாகும்.
இத்திட்டத்தின் கீழ் மதிவண்டி பாதை, நடைபயிற்சி நடைபாதை, குளக்கரையில் நான்கு இடங்களில் அலங்கார வளைவுகள், பாதசாரிகள் உண்டு மகிழ குளக்கரையின் ஓரத்தில் 47 சிற்றுண்டிகள் மற்றும் பல வகையான சிறு அங்காடிகள், கோவை -பொள்ளாச்சி சாலையின் மேற்புறம் நவீன வகையான வாகன நிறுத்துமிடம், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், குளத்தைச் சுற்றி 5.5கி.மீ நீளத்திற்கு வண்ணமயமான அலங்கார விளக்குகள், 4 இடங்களில் சூரிய ஒளி மின்சார தகடுகள், 36 இடங்களில் காற்றாலைக் கோபுரங்கள், 23 இடங்களில் பார்வையாளர் மாடங்கள், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனக் காட்சியினை கண்டுகளிக்க ஏதுவாக சிறப்பு பார்வையாளர் மாடம், 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளது. இப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ குறிச்சி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்தும் பணிகளும் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ,’’ என்றார்.