April 30, 2021
தண்டோரா குழு
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி, பாரதியார் பல்கலைகழகம் ஆன்லைன் வாயிலாக, வகுப்புகளை மிக சிறப்பாக நடத்தி வருவதாக பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் காளிராஜ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மிக வேகமாக கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால்,இதனை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை கோவை பாரதியார் பல்கலைகழகம் ஊக்குவித்து வருகிறது.இந்நிலையில் பல்கலைகழக வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு குறித்த இணையதள நிகழ்வு பாரதியார் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
பதிவாளர் முனைவர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் காளிராஜ் துவக்கி வைத்தார். இதில் மருத்துவர் பக்தவத்சலம் கலந்து கொண்டு கோவிட் பாதுகாப்பு குறித்து பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் டாக்டர் காளிராஜ்,
கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் இது குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு,நாட்டு நல பணி திட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச கப சுர நீர்,மூலிகை முக கவசங்கள் வழங்கி,சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்து கூறுவதாக தெரிவித்தார்.
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை பொறுத்த வரை முது நிலை கலை பிரிவு மாணவர்களுக்கு இணையவழியாகவே வகுப்புகள் நடத்துவதாக கூறிய அவர்,அறிவியல் மற்றும் சில பிரிவுகளுக்கு மட்டும் செய்முறை வகுப்புகளை விரைந்து நடத்துவதாக தெரிவித்தார். ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முனைவர் மணிமேகலன், முனைவர் வசந்த், நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.