April 30, 2021
தண்டோரா குழு
பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி ஆனந்த்(54). கொரோனா தொற்று பாதிப்புக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதிகாலை 3 மணியளவில் காலமானார்.
இவர் அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி. ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க கணா கண்டேன் படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவரது மறைவிற்கு ரஜினி, கமல், தனுஷ், மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.