April 29, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் ஓம்சக்தி நகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் அலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி வடக்கு மண்டலம் 41வது வார்டு பகுதிகளில் மொத்தம் 20 ஆயிரம் எண்ணிக்கையிலான குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டில் 210 வீதிகள் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிக்கப்பட்ட வீதிகளின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.
இதில் மேற்கொண்டு மற்ற வீதிகளுக்கும் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 14 வீதிகளை ஒருவார காலத்திற்கு தடுப்புகள் கொண்டு அடைத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் நோய் தொற்று குறித்த சந்தேகங்களுக்கு மாநகராட்சியின் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனையில் தொற்று அறிகுறி இருப்பின் அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
லேசான தொற்று அறிகுறி உள்ளவர்கள் அவர்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பு அமைத்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வடக்கு மண்டலம் காந்தி மாநகர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர் நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.