April 26, 2021
தண்டோரா குழு
கோவை வேளாண்மை கல்லூரி அருகே இரண்டு அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கடையின் சூப்பரவைசராக வேலுச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை விற்பனை செய்த பணத்தை டாஸ்மாக நிர்வாகம் பெற வராததால் அதனை கல்லா பெட்டியில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதற்கிடையில், கொரோனோ தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள கடை எண் 1725 என்ற மதுபான கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பூட்டை உடைத்து கொள்ளையர்கள் 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் 72 ஆயிரம் ரூபாய் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
திருட்டு சம்பவம் நடைபெற்ற இந்த மதுபான கடையில் சிசிடிவி வசதி இல்லாத காரணத்தாலும் மேம்படுத்தபட்ட கல்லா பெட்டிகள் இல்லாததால் எளிதில் பணத்தை திருடி சென்றுள்ளனர். கடையில் பூட்டு உடைக்கபட்டு பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து மேலாளர் வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, 10,72,270 ரூபாய் மற்றும் 25 பெட்டி ஓரியன் குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.