April 23, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக வடக்கு மண்டலத்தில் ஸ்ரீ சக்தி காலனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களிடம் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும்.கொரோனா பாதித்த வீடுகளிலுள்ள அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளி கடைபிடித்து,அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கபசுர குடிநீர் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அனைவரும் கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நகர்நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், செவிலியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.