April 10, 2021 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டாவது டோஸை மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேற்று செலுத்திக்கொண்டார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கோவை மாவட்டத்தில் கடந்த
ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 158 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 25 ஆயிரத்து 544 நபர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் என தற்போது வரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 702 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 484 ஆண்கள்,1 லட்சத்து 29 ஆயிரத்து 219 பெண்களும் அடங்குவர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் தான் கெரோனா வைரஸ் தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 78 அரசு மையங்களிலும், 102 தனியார் மையங்களிலும் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றது.
இருப்பு எண்ணிக்கை விவரம்:
மாவட்ட சுகாதாரத்துறை அலுவலக கையிருப்பில் 18 ஆயிரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 ஆயிரத்து 260, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 ஆயிரத்து 500, அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 770, அரசு ஆரம்ப மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் 26 ஆயிரத்து 160 என மொத்தம் 55 ஆயிரத்து 690 டோஸ் இருப்பு உள்ளது.