April 10, 2021 தண்டோரா குழு
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது (63).ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் சுயதொழில் செய்து வருகிறார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் வார்டு கவுன்சிலர், எம் எல் ஏ ,எம் பி என இதுவரை 36 தடவை தேர்தலில் நின்று குறைவான வாக்குகளே பெற்றுள்ளார்.
ஆண்டிப்பட்டு,சாத்தான் குளம் ,திருச்செந்தூர், மதுரை மேற்கு ,பென்னாகரம்,ஆர் கே நகர், திருமங்கலம் உள்ளிட்ட இடைத் தேர்தல்களில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். தற்போது 36 ஆவது முறையாக கோவை கிணத்துக்கடவு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுள்ளார்.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகளே பதிவாகியுள்ளது.இதில் பெரும்பாலான இடங்களில் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
கிணத்துக்கடவு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நூர் முகமது நம்மிடம் பேசும்போது,
தமிழகத்தில் வாக்களிப்பவரின் எண்ணிக்கை குறைந்திருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும் ஓட்டுப் போடாதவர்களின் குடும்ப, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சலுகைகளை பறிக்க வேண்டும்.தேர்தல் ஆணையம் 100% வாக்குபதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய நிலையில் வாக்குபதிவு குறைந்திருப்பதால் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் வாக்காளிப்பார்கள் என்றார்.
36 ஆவது முறையாக தேர்தலில் நின்ற போதும் வெற்றி பெற வில்லை என்றாலும் மக்களிடம் மாற்றம் வரவே தான் தேர்தலில் நிற்பதாக தெரிவித்தார்.இந்த தேர்தலில் டெபாசிட் உட்பட 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருப்பதாகவும், இவ்வொரு தேர்தலுக்கும் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ரூபாய் வரை செலவு ஆவதாகவும் தெரிவித்தார். தன்னுடைய சொந்த பணத்தில் செலவு செய்வதாகவும், மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.