March 30, 2021
தண்டோரா குழு
எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை அரசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை கணபதி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய அவர்,
எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை அரசு என குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவின் கட்டளைகளுக்கு அதிமுக கட்டுப்பட்டு நடக்கிறது எனவும், அடிமை அரசிடம் இருந்து மீட்க தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார். தமிழக விவசாயிகள் நலனை பாதிக்கும் வேளாண் திருத்த சட்டங்களுக்கு அதிமுக எம்.பி.க்கள் ஆதரவளித்தனர் எனவும், பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக அதிமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் மதத்தின் பெயரால் மக்களை பிரித்துள்ளனர் எனவும், ஆர்.எஸ்.எஸ் சித்தாங்களை பாஸி தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கிறது எனவும் கூறிய அவர், அதிமுகவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகள் பாஜக, ஆர்.எஸ்.எஸ்க்கு அளிக்கும் வாக்குகளாகும் எனத் தெரிவித்தார்.
மக்கள் விரோத மோடி, எடப்பாடி அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும், பாஜகவிற்கு வால் பிடிக்கும் அதிமுக அண்ணா, திராவிடம் ஆகிய பெயர்களை கைவிட வேண்டும் எனவும் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.