March 29, 2021
தண்டோரா குழு
சீ விஜில் செயலி மூலம் இதுவரை 583 புகார்கள் பெறப்பட்டு 446 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.அதனடிப்படையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது.
தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை பொதுமக்கள் 1800 425 4757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டுதல், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகித்தல், ஒரு சேர வாகன அணிவகுப்பு மேற்கொள்ளுதல், மது விநியோகித்தல், உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதிமீறல் குறித்த புகார்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்படும் புகார்களை தேர்தல் பறக்கும் படைக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதனிடையே நேற்று வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 132.இதில் தீர்வு காணப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 93, நிராகரிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 39, நிலுவையில் உள்ள புகார்களின் எண்ணிக்கை 0 ஆகும். அதே போல் தேர்தல் விதிமீறல்களை பொதுமக்கள் பார்த்தால் செல்போனில் படம் பிடித்து அதை சீ விஜில் என்ற செயலி மூலம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பலாம்.
அதன்பேரில் பறக்கும் படையினர் அங்கு சென்று பெறப்பட்ட புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதில் நேற்று வரை பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 583. இதில் தீர்வு காணப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 446,நிராகரிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 136,நிலுவையில் உள்ள புகார்களின் எண்ணிக்கை 1 ஆகும்.