March 26, 2021
தண்டோரா குழு
விவசாயம் கண்டு பிடித்ததில் இருந்து மது பழக்கம் இருக்கின்றது. இந்த வியாதியை குணப்படுத்த தமிழகத்தில் பாதி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அந்த இடங்களில் மனோதத்துவ மருத்துவர்களை வைத்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர். மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாப்பநாயக்கன்பாளையம், பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
எங்கள் கட்சியில் ஜெயிலுக்கு போனவர்கள் யாருமில்லை,எங்களுடைய வேட்பாளர்கள் எந்தவிதத்திலாவது மக்களுக்கு சேவை செய்து வந்துள்ளார்கள்.என்னுடைய சக போட்டியாளர்கள் என்னை வெளியூர்கார்ர் என்கின்றனர், ஆண்டிபட்டி, அருப்புகோட்டை எம்.ஜி.ஆரின் ஊர் கிடையாது.
நான் கோவைக்குதான் வர போகின்றேன், என்னை வெளியூர்காரன் என்று சொல்லுபவர்கள் கோவையில் எனக்கு வாடகைக்கு அல்லது சொந்தமாக வீட்டை பாருங்கள். வெளியூர்காரர் என்ற விமர்சனத்தை வைப்பவர்கள் மயிலாப்பூரை சேர்ந்தவர்கள்.
இலவசம் ஏழ்மையை போக்கவே போக்காது. இலவசம் சாக்கடையை சுத்தம் பண்ணாது, குடிக்க தண்ணீர் கொடுக்காது. எனது 60 வருட வாழக்கையை வெற்றிகரமாக நடத்தியது இந்த தமிழகம்,என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக என தெரிவித்தார்.
எங்களை பார்த்து மற்றவர்களுக்கு தொடை நடுக்கம் ஏற்பட ஆரமித்து விட்டது. தமிழகம் முழுவதும் இருக்கும் ஒரே வியாதி இந்த இரு கழகங்கள்தான்.ஏழ்மையை இந்த இரு அரசுகளும் பாதுகாத்து வைத்துள்ளது. உங்களின் ஓட்டை விலை பேசவே இந்த இரு கழகங்களும் முயற்சிக்கின்றன. தவறுகளை மறைக்க இலவசம் கொடுக்கின்றனர்.
வாழ்நாள் முழுவதும் சாப்பிட வசதியாக வயல் எங்கிருக்கின்றது என்பதை காட்டுகின்றேன்.
பிரச்சாரத்தில் டாஸ்மாக் குறித்து பேசாதீர்கள், குடிகாரர்கள் ஒட்டும் நமக்கும் வேண்டும் என்கின்றனர், குடிகாரர்களும் என் சகோதரர்கள் தான்.விவசாயம் கண்டு பிடித்த தில் இருந்து மது பழக்கம் இருக்கின்றது.இது வியாதி, இதை குணப்படுத்த தமிழகத்தில் பாதி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அந்த இடங்களில் மனோதத்துவ மருத்துவர்களை வைத்து சிகிச்சை கொடுக்க வேண்டும்.இதை சகோதரர்கள் மட்டுமே செய்வார்கள்.
டாஸ்மாக்கை பேசினால் ஓட்டு குறையும் என்கின்றனர். அதில் குறைந்தால் தாய்மார்கள் எனக்கு ஓட்டுபோடுவார்கள். கோவை நம்ம ஊரு,இதற்கு மேல் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பெண் குழந்தைக்கு நட்சத்திரா என்று பெயர் வைத்தார். அப்போது குழந்தையின் பெற்றோர்களை பார்த்து குழந்தைக்கு நான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறிய உங்கள் எண்ணம் மகிழ்ச்சியடைய செய்கிறது என்றும் அதே சமயத்தில் கரோனா காலத்தில் குழந்தையை எடுத்து வந்தது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார். எனவே பெயர் வைத்தவுடன் குழந்தையை பத்திரமாக வீட்டிற்கு எடுத்து செல்லும் படியும் கூறினார்.