March 11, 2021
தண்டோரா குழு
பணம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உதவ முன் வருவதில்லை என்றும், உதவ நினைப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை என்றும் நடிகர் கார்த்திக் பேசியுள்ளார்.
தீக்காயங்கள் காரணமாக ஏற்படும் குறைபாடுகளை முற்றிலும் இலவசமாக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் மற்றும் கங்கா மருத்துவமனை சார்பில் ‘ஹோப் அஃப்டர் ஃபயர்’ என்ற திட்டத்தின் 3ம் கட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது. திரைப்பட நடிகர் கார்த்திக் சிவக்குமார் கங்கா மருத்துவமனையில் திட்டத்தின் 3ம் கட்டத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மருத்துவர் ராஜ சபாபதி பேசுகையில்,
“இந்த திட்டத்தின் மூலம் மதிப்பீடு, அறுவை சிகிச்சை முதல் பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு வரை கவனிக்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக 574 நோயாளிகளுக்கு 955 அறுவை சிகிச்சைகள் ரூ.5.66 கோடி மதிப்பில் இலவசமாக செய்யப்படு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
தொடர்ந்து நடிகர் கார்த்திக் பேசுகையில்,
“கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டினுள் தான் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள், போலீசார் தான் மக்களை காப்பாற்றினார்கள். அவர்களுக்கு நன்றி. நமக்கு பல ஆசைகள் உள்ளன. ஆனால் தீக்காயம் பட்ட குழந்தைகள் சமூகத்திலிருந்து விலகி இருக்க நினைக்கின்றனர். அதுவே அவர்கள் ஆசையாக மாறும் சூழல் ஏற்பட்டுவிட்டது. அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தீக்காயங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பெண்களும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்கள்தான் விடிவெள்ளியாக உள்ளனர். உதவ நினைப்பவர்களிடம் பணமிருப்பதில்லை பணம் இருப்பவர்கள் பலர் உதவ முன்வருவதில்லை.ஆனால் இது போன்ற இலவச சிகிச்சைகளால் பலர் நல்வாழ்வு அடைகின்றனர்.” என்றார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் ராஜசேகர் சீனிவாசன், மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் ஜானகிராம் ராஜூ, செயலாளர் சாந்தி சுரேஷ், நிதிகள் சேர்மன் ரமேஷ் வீர ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.