March 5, 2021
தண்டோரா குழு
கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரியின் முதல்வர் மு.இராமநாதன் மூளை சிதைவு நோயின் மருந்து குறித்த ஆராய்ச்சியில் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் வாங்கி கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரியின் முதல்வராக இருப்பவர் மு.இராமநாதன்.இவர் ஏற்கனவே சர்க்கரை நோய் குறித்த மருந்தியல் ஆராய்ச்சி துறையில் பி.எச்.டி.பிடித்துள்ளார். இந்நிலையில் மேலும் இவர் கடந்த இருபது ஆண்டுகளாக மூளை சிதைவு நோய் தொடர்புடைய மருந்தியல் ஆராய்ச்சி செய்து வந்த இவர்,அதில் வெற்றியும் கண்டு,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் உயரிய டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை கழகம் இவருக்கு இந்த உயரிய பட்டத்தை வழங்கியுள்ளது. கடந்த 26 ம் தேதி தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இவருக்கு டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் வழங்கி கஙுரவித்துள்ளார்.
இந்நிலையில் பட்டம் வாங்கி கோவை மற்றும் பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரிக்கு பெருமை சேர்த்து முனைவர் இராமநாதனுக்கு, பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் புவனேஷ்வர், ஜெகந்நாதன்,ஜெயசுதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் இராமநாதன்,
ஆராய்ச்சியில் ஈடுபடும் இளைய தலைமுறை மாணவர்கள் தங்களது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து அறிவியல் மற்றும் துறை சார்ந்த ஆராய்ச்சிகள் ஈடுபடுவதால் வெற்றி பெற இயலும் என தெரிவித்தார்.