February 24, 2021
தண்டோரா குழு
காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தில் இரு மாநில விவசாயிகளும் பலனடைய வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் என அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார்.
நாளை கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி ரவி, மாநில தலைவர் முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது சி.டி. ரவி பேசுகையில்,
நாளை நடைபெற உள்ள அரசு விழாவில் சில திட்டங்களை பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு சுமார் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த சி.டி ரவி, பிரதமர் கோவை வருகையின் போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவரை விமான நிலையத்தில் வரவேற்பார்கள் எனவும் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரணி நடைபெற உள்ளது எனவும் அதில் பிரதமர் உட்பட கூட்டணி கட்சியினர் பங்கு இருப்பார்கள் எனவும் தெரிவித்த அவர், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தேசிய கட்சியான பாஜக அரசியலாக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இரு மாநிலங்களையும் பாஜக சமமாக பார்க்கிறது எனவும், இதில் இரு மாநில விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எவ்வித பாகுபாடும் காட்டப்படாது எனவும் அந்தந்த மாநில முதல்வர்கள் அவரவர் விருப்பங்களைத் இருக்கத்தான் செய்வார்கள் எனவும் சிடி ரவி தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேசுகையில்,
தமிழக பாரம்பரியத்தை மதிப்பவர் பிரதமர் மோடி எனவும், பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுவார் எனவும் தெரிவித்தார். மேலும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எனவும், இந்த விவகாரத்தில் தமிழர்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.