February 18, 2021
தண்டோரா குழு
குடும்ப வன்முறைகளை தடுக்க ‘வலிமையான குடும்பம் வலுவான சமூகம்’ எனும் பிரசாரம் வரும் 19ம் தேதி முதல் துவங்குகிறது என்று ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அறிவித்துள்ளது.
இது குறித்து ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவி கதீஜா காஜா கோவையில் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை விட இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகமான அளவு குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன. குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப கட்டமைப்பை பற்றிய சரியான அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துவதன் மூலம் வலிமையான ஆக்கப்பூர்வமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்.
அதன் அடிப்படையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் வரும் 19 முதல் 28ம் தேதி வரை ‘வலிமையான குடும்பம் வலுவான சமூகம்’ என்ற மைய கருத்தில் தேசிய அளவில் பிரசார இயக்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு கதீஜா காஜா கூறினார்.
கோவை மாநகர மகளிரணி தலைவி ஜஹீனா அஹமத், நிர்வாகிகள் பர்ஜானா, சலீனா பஹி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.