February 15, 2021
தண்டோரா குழு
ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் 24 தேதி வருகிறது.இதை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏழை எளிய 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். அதன்படி கோவை-சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் பகுதியில் உணவு,குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு 123 சர்வ மத ஜோடிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்து, கிறித்துவ, இஸ்லாமிய ஜோடிகளுக்கு அவரவர் மத வழி முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கட்டில், பீரோ, மெத்தை, பாத்திரங்கள் உள்ளிட்ட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டன. விழாவில் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, விஜயபாஸ்கர், செங்கோட்டையன், அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசுகையில்,
2011 ல் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது கோவை மண்.7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியவர் எடப்பாடியார். பொங்கல் பரிசாக 2500 ரூபாய், 2000 மினி கிளினிக் கொடுத்தவர் முதல்வர் எடப்பாடி.கொரொனா காலத்தில் வெளியே வாராதவர் மு.க.ஸ்டாலின்.
4.5 கோடிக்கு விக் வைத்து நடித்து கொண்டு இருக்கின்றார் மு.கஸ்டாலின்.பயிர்கடன்களை ரத்து செய்து விவசாயிகளின் கோரிக்கையினை இந்த அரசு நிறைவேற்றி இருக்கின்றது.எது சொன்னாலும் கேட்டுக்கொள்ள கூடியவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கின்றார்.பல திட்டங்களை கொடுத்து வருகின்றார் முதல்வர். ஸ்டாலின் சொல்வதை முதல்வர் செய்கின்றாராம். மு.க.ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா? வாழும் காமராஜர் என விவசாயிகள் சொல்கின்றனர்.முதல்வர் அறிவுபூர்வமாக சிந்திப்பவர். மக்களிடம் இருத்து வந்தவர் முதல்வர்.கருணாநிதி இருக்கும் வரையில் தலைவர் பதவி ஸ்டாலினுக்கு வழங்க படவில்லை.கருணாநிதி மறைவிற்கு பின் பின்கதவு வழியாக வந்து தலைவர் பதவியை பிடித்தவர் ஸ்டாலின்குற்றாலத்தில் போய் குளித்து விட்டு வந்தால் அவர் விக் போயிடும் என ராஜேந்திர பாலாஜி சொல்லி இருந்தார்.
உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் எந்த வேலையையும் செய்யவில்லை.ஆண்டவன் சொல்றார் அருணாசலம் செய்கின்றார் என டயலாக் பேசுகின்றார். கேவலம்
ஈழத்தில் ஓன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்க காரணமாகவும், 50 ஆயிரம் பெண்களை கற்பழிக்க காரணமாகவும் இருந்தவர்ர்கள் திமுகவும் கருணாநிதியும், ஸ்டாலினும்.
மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்வராக வர முடியாது. மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதுணையாக இருத்து முதல்வர் பதவியை மீண்டும் வென்றெடுப்போம் என்றார்.
திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது,
கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. அதிமுக வரலாற்றில் எடுத்து காட்டு மண்டலமாக கொங்கு மண்டலம் இருக்கின்றது.ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறாமல் அப்படியே நடைமுறைபடுத்தும் முதல்வராக எடப்பாடி இருக்கின்றார்.தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் கோடிக்கு மேல் நிதி மத்திய அரசுக்கு செல்கின்றது. காங்கிரஸ் ஆட்சியில் எந்த திட்டத்தையும் திமுக பெற்று கொடுக்கவில்லை.
ஒரு மெடிக்கல் கல்லூரி வாங்குவதற்கு அலைய வேண்டி இருக்கும் நிலையில் 11 மருத்துவகல்லூரிகளை அதிமுக அரசு பெற்று கொடுத்து இருக்கின்றது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பூர்வாங்க பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற பொது தேர்தலில் வீடு வீடாக நமது சாதனைகளை எடுத்து செல்ல வேண்டும்.விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்றபடி இன்று திருமணம் செய்த மணமக்கள் இருக்க வேண்டும் என்றார்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்த நாளில் திருமணங்கள் நடத்தப்படுகின்றது.
அதிமுகவில் மட்டும்தான் இப்படிபட்ட நிகழ்வுகள் நடைபெறும்.அத்திப் ஜாதி , மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதற்கு இந்த திருமண மேடையே சாட்சி.திருமண உதவி திட்டம்,
தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் 6010 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு வழங்கி இருக்கின்றது.இதுவரை 298849 அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.திமுக அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றுவதில்லை.அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி.சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்றோம்.அவினாசி அத்திகடவு திட்ட இரண்டாம் கட்ட விரிவாக்க பணி விரைவில் துவங்க இருக்கின்றோம்.
தமிழ்நாடு தொழில் துவங்க உகந்த மாநிலம் என்பதால் தொழில் முனைவோர் தொழில் ஆர்வமாக தமிழகம் வருகின்றனர்.இந்தியாவில் அதிக விருது பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கின்றது.பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரமாக கோவை, சென்னை இருக்கின்றது என்றார்.