February 8, 2021
தண்டோரா குழு
கோவையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் பாதுகாப்புத் துறை உற்பத்தி சார்ந்த கண்காட்சியை நடத்துவதற்கான பணிகளை கொடிசியா துவங்கி உள்ளது என அதன் தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படையுடன், கோவை கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் தொழில் வளர்த்தெடுப்பு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் “ஏரோ இந்தியா 2021 கண்காட்சி” பெங்களூருவில் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
இந்திய விமான படையின் சார்பில் ஏர்வைஸ் மார்ஷல் ராமகிருஷ்ணன், கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் தொழில் வளர்த்தெடுப்பு மையத்தின் சார்பில் கொடிசியா தலைவர் மற்றும் மைய இயக்குநர் ரமேஷ் பாபு, மைய இயக்குநர் சுந்தரம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது:
இந்திய விமான படையின் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள், இணைப்புகள், துணை இணைப்புகள் ஆகியவற்றின் உள்நாட்டு தயாரிப்பு மற்றும் பழுது நீக்குதல் ஆகியவற்றுக்கான தீர்வுகளை கண்டு அடைவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் விதமாகவும், உள்நாட்டு ராணுவ உற்பத்தியை ஆத்ம நிர்பார் அபியான் திட்டத்தின் கீழ் செயல்படவும், ராணுவ தளவாட உற்பத்தி சார்ந்த புதிய தொழிலகங்களை ஊக்குவிக்கவும், இந்திய பாதுகாப்புத் துறை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு துறையின் உற்பத்தி சார்ந்த இந்த திட்டங்களுக்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் (டிட்கோ) நிறுவனம் கொடிசியாவுடன் இணைந்து செயல்பட உள்ளது. சுமார் 250 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் தயராக உள்ளது. கோவையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் பாதுகாப்புத் துறை உற்பத்தி சார்ந்த கண்காட்சியை நடத்துவதற்கான பணிகளை கொடிசியா துவங்கி உள்ளது.
இவ்வாறு ரமேஷ் பாபு கூறினார்.