February 5, 2021
தண்டோரா குழு
எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவுகளை எண்ணும் மையமாக அரசு தொழில்நுட்ப கல்லூரி செயல்பட உள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆட்சியர் ராஜாமணி தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரையில் இவ்வளாகத்திலேயே அமைக்கப்படும் பாதுகாப்பு அறைகளிலேயே வைத்து பாதுகாக்கப்படும். எனவே பாதுகாக்கப்படும் காப்பு அறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் தேவைப்பபடும் அடிப்படை கட்டமைப்புகளான மின்சார வசதி, பிரத்தேய தடுக்குகள் அமைத்தல், வாக்கு எண்ணும் அறைகளை விரிவு படுத்துதல், குடிநீர் வசதி, வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக எடுத்துச்செல்லும் வகையிலான பிரத்யேக நடைபாதை வசதி, முழுபாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திர காப்பு அறை உள்ளிட்டவற்றினை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அமைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாநகர போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், பொள்ளாச்சி சப் கலெக்டர் வைத்தியநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.