February 5, 2021
தண்டோரா குழு
கோவையில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் வருங்கால சந்ததியினர் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக மாபெரும் உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பினர் கோவையில் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 143 சமுதாய மக்களை ஒன்றிணைத்துப் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டமைப்பின் முதல் மாநாடு கோவையில் நடைபெற்றது.
இதில், முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உட்பட பிற்படுத்தப்பட்டோர் சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் இளைஞர்களின் நலன் கருதியும்,வருங்கால சந்ததிகளின் உரிமையை பாதுகாக்கும் விதமாக கோவையில் ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பு இருக்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், முன்னாள் காவல்துறை அதிகாரியும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி பேசுகையில்,
பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் அனைவரின் நலன் கருதியும், உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாகவும்,பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் நேர்மையான முறையில் கணக்கெடுத்து வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறிய அவர்,இது போன்ற இழந்த உரிமைகளை மீட்கும் விதமாக, வரும் 8 ஆம் தேதி கோவை, பவர் ஹவுஸ் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பு நடைபெற உள்ளதாகவும்,இதில் கோவை,திருப்பூர் பகுதிகளில் இருந்தும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பிற்படுத்தப்பட்டோர் அனைத்து சமூக அமைப்பைச் சேர்ந்த வெள்ளியங்கிரி, வேலுச்சாமி இருகூர் அசோக்,சூலூர் சந்திரசேகர் மாரியப்பன்,டாக்டர் சிவகுமார்,சூலூர் கண்ணன்,ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.