February 3, 2021
தண்டோரா குழு
கல்யாணராமனை கொல்ல வேண்டும் என பேசும் தீவிரவாத அமைப்பை சார்ந்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் துணைத்தலைவர்கள் கனகசபாபதி மற்றும் அண்ணாமலை இருவரும் கூட்டாக பத்திரிகை யாளர்களை சந்தித்தனர். அப்போது அண்மையில் வெளியான பட்ஜெட் மக்களுக்கும், தொழில் துறைக்கு சாதகமானதாக இருந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பாஜக மாநில துணை தலைவர் கனகசபாபதி பேசுகையில்,
கொரோனாவால் அரசுக்கு வருமானம் குறைவாகவும், செலவு மிக அதிகமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் மெட்ரோ திட்டம் மூலம் மாசு குறையும் எனவும், 1கோடிக்கு பேர் மோடியின் வேண்டுகோளை ஏற்று எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்ததால், 8 கோடி பேர் பயனடைந்ததாக தெரிவித்தார். சாலையில் படுத்துள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டமும், 15ஆயிரம் பள்ளிகளில் புதிய கல்வி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சுயசார்பு நடவடிக்கைகளால் கடன் வாங்காமல் இருப்பதாக தெரிவித்தார். கோவை நல்லூர்வயல் பகுதியில் காருண்யா நிறுவனம் வந்த பிறகுதான், மதம் மாற்ற வேலை நடந்து வருவதாகவும், நல்லூர் வயல் காவல் நிலையம், காருண்யா நகர் காவல் நிலையமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். அண்மையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.
பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேசும்போது,
பாஜக ஆட்சியில்தான் சாமானியர்களுக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுவதாகவும், திமுக வைச்சார்ந்த மேட்டுப்பாளையம் மூதாட்டிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது , கட்சியை பார்த்து வழங்க வில்லை என்றார்.இந்தியாவிலே தமிழகத்திற்கு மட்டும்தான் பத்ம விருதுகளும், முத்ரா கடனும் அதிகம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஸ்டாலின் தூண்டு சீட்டு பார்த்து படிப்பவர், இரண்டு பக்கம் தொடர்ந்து பேச முடியுமா எனவும், அவர் பகுதி நேர அரசியல்வாதி என்றார். இஸ்லாமியர்கள் அதிகம் விரும்பும் கட்சி பாஜக எனவும், கருத்து சுதந்திரத்தை மீறி கல்யாணராமனை கொல்ல வேண்டும் என பேசும் தீவிரவாத அமைப்பை சார்ந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.