January 30, 2021
தண்டோரா குழு
கொரோனா கால நேரத்தில் அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த இரண்டு காவலர்களுக்கு கோவை மாவட்ட வூசு சங்கம் சார்பாக வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வழங்கி காவலர்களை பாராட்டினார்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடுமையான கொரோனாவை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறபித்திருந்தன.இந்நிலையில் நோய் தொற்றுக்கு பயந்து இரத்த தானம் செய்பவர்களும் அதிகம் முன் வராததால் அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மகேஷ்,சசிகுமார் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் கோவை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான இரத்தத்தை தானம் செய்தனர். கொரோனா காலத்தில் இந்த இரண்டு காவலர்களும் செய்த அவசர உதவியை காவல்துறை அதிகாரிகள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர்களது சமூக பொறுப்புணர்வை பாராட்டி கோவை மாவட்ட வூசு சங்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு காவலர்கள் மகேஷ் மற்றும் சசிகுமாரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.இதில் கோவை மாவட்ட வூசு சங்கத்தலைவர் கணேசன் உடனிருந்தார்.