January 26, 2021
தண்டோரா குழு
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. ‘சிறந்த நிர்வாக திறன் படைத்த எஃப்.பி.ஓ’ என்ற பிரிவில் (Best Performing FPO under the category ‘Governance’) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (ஜனவரி 26) நடந்த 72-வது குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் இவ்விருதினை வழங்கி வாழ்த்து கூறினார். அவ்விருதினை நிறுவனத்தின் தலைவரும் தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் பெற்றுக் கொண்டார்.
வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனமானது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஆலோசனை படி கடந்த 2013-ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. இதில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 1,063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 38 சதவீதம் பேர் பெண் விவசாயிகளாகவும், 70 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாகவும் உள்ளனர்.
இந்நிறுவனம் தேங்காய், பாக்கு மற்றும் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறது. கடந்த 2019-20-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.11.13 கோடி ஆண்டு வருவாய் (Annual Turnover) ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்நிறுவனத்துக்கு அவுட்லுக் பத்திரிக்கையானது தேசிய அளவில் ‘சிறந்த எஃப்.பி.ஓ’ என தேர்வு செய்து விருது வழங்கியது. அவ்விருதை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.