January 20, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவக்கல்லூரி, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று துவங்கியது.
தமிழக மருத்துவக்கல்லூரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று துவங்குகிறது. இவர்களுக்கு முறையாக வகுப்புகளை பிப்ரவரி 2-ம் தேதி துவங்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை கண்டறியும் ஆர்.டி.பி.ஆர் டெஸ்ட் செய்ய வேண்டும். ஆள் மாறாட்டத்தை தடுக்க அனைத்து மாணவர்களின் கல்வி, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் பெருவிரல் ரேகை, விழித்திரையை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் சமீபத்திய புகைப்படம் பெற வேண்டும். இவை அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். பின் அனைத்து ஆவணங்களையும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.இதில், மருத்துவமனை டீன் காளிதாஸ் பங்கேற்றார். இதில், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரியில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 100 இடங்கள் உள்ளது. இந்த மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இஎஸ்ஐ டீன் நிர்மலா தலைமையில் இன்று இ.எஸ்.ஐ-யில் நடந்தது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.
மேலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் டீன் காளிதாஸ் பேசுகையில் “அரசு மருத்துவ கல்லூரியில்150 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இதில், 7.5 இட ஒதுக்கீட்டில் மட்டும் 10 பேர் சேர்ந்து உள்ளனர். இவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. ராகிங் தடுக்க கமிட்டி போடப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் இருப்பர்.தவிர, விடுதியில் தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை சுழற்சி முறையில் ஸ்டாப் ஒருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி 2-ம் தேதி முதல் நடக்கும். மாணவர்களுக்கு மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் எடுத்துரைக்கப்பட்டது” என்றார்.